ஷா ஆலம், பிப்ரவரி 5 — சுங்கை துவாவில் உள்ள ஸ்ரீ முர்னி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதை பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் நோயியல் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட வெட்டுக்காயம் முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டதாக டத்தோ டாக்டர் ஜஹாரி நூர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் போராட்டத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், இது பாதிக்கப்பட்ட பெண் தனக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார். மேலும், அந்தப் பெண் பின்புறமிருந்து தாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகவும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் உள்ள தனது குடியிருப்பில் 41 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படுக்கையறையில் உள்ள ஒரு கட்டிலில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் அவர் சடலமாகக் கிடந்தார். இது குறித்து பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் கூறுகையில், போலீசார் இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருவதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


