ஷா ஆலம், பிப் 4: வெளிநாட்டினரைப் இலக்காகக் கொண்டு பகுதிநேர வேலை மற்றும் பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இனைய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சிலாங்கூர் காவல்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. கடந்த மாதம் காஜாங், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் பூச்சோங் ஆகிய இடங்களில் உள்ள மூன்று வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
சிலாங்கூர் மாநில வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மாவட்டக் காவல்துறை தலைமையகங்கள் இணைந்து நடத்திய இந்த ஒருங்கிணைந்த சோதனையில், 25 முதல் 36 வயதுக்கு உட்பட்ட 20 நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 42 கைபேசிகள், 20 கணினிகள், நான்கு வைஃபை (WiFi) கருவிகள், இரண்டு மடிக்கணினிகள், இரண்டு மோடம்கள் மற்றும் ஒரு ரூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 85,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"டிஜிட்டல் தளங்கள் மூலம் பகுதிநேர வேலை, பங்குச்சந்தை முதலீடு மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வைப்பதே இக்கும்பலின் செயல்பாட்டு முறையாகும். இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகப் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை முதலீடு செய்ய வைப்பார்கள்," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 23 அன்று காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் நடத்தப்பட்ட முதல் சோதனையில், ஒரு உள்ளூர் ஆண் மற்றும் ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 2025 டிசம்பர் முதல் செயல்பட்டு வந்த இந்த கும்பல், இனைய பகுதிநேர வேலை வாய்ப்புகள் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டினரை இலக்காகக் கொண்டிருந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 மற்றும் 120B ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படுகின்றனர். பண்டார் சுங்கை லோங்கில் பிடிபட்டவர்களுக்குத் தலா 2,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மற்றவர்கள் 5 முதல் 7 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்னதாகக் குற்றப் பின்னணியோ அல்லது போதைப்பொருள் பழக்கமோ இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.


