ஷா ஆலம், பிப் 4: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் அவரது தோழி படுகாயமடைந்தார். நேற்று இரவு கெடா, அலோர் ஸ்டார், ஜாலான் சூக்கா மெனாந்தியிலுள்ள அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் பயணித்த பெரோடுவா மைவி கார் விபத்துக்குள்ளானதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இரவு 8.20 மணியளவில் அப்பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த அந்த இரு பெண்களின் வாகனத்தைக் காவல்துறையினர் துரத்தியபோது, அது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று கோத்தா ஸ்தார் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சையத் பாஸ்ரி சையத் அலி கூறினார்.
விபத்துக்குள்ளான காரிலிருந்து 210 கிராம் எடையுள்ள ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு நெகிழிப் பையை காவல்துறையினர் கண்டெடுத்தனர்," என்று அவர் இன்று தெரிவித்தார். காயமடைந்த 37 வயதுடைய பெண் ஓட்டுநருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான 12 குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த அவரது தோழிக்கு மூன்று போதைப்பொருள் வழக்குகளும் ஒரு குற்றவியல் வழக்கும் உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் உடல் சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


