ஒப்பந்த ஆசிரியர் நியமனம்: காத்திருப்புப் பட்டியலிலுள்ள ஆசிரியர்களின் வாய்ப்புகளைப் பாதிக்காது

3 பிப்ரவரி 2026, 9:17 AM
ஒப்பந்த ஆசிரியர் நியமனம்: காத்திருப்புப் பட்டியலிலுள்ள ஆசிரியர்களின் வாய்ப்புகளைப் பாதிக்காது

சிரம்பான், பிப் 3: கல்வி அமைச்சு வரும் மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளவிருக்கும் 20,000 ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் பணி நியமனங்கள், தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள தகுதியான ஆசிரியர்களுக்கான வாய்ப்புகளை எவ்விதத்திலும் பாதிக்காது என்று கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

தகுதியுள்ள காத்திருப்புப் பட்டியலிலுள்ள ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது குறித்து கல்விச் சேவை ஆணையத்துடன் (SPP) ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "நேர்காணலில் வெற்றி பெற்று காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை; அவர்கள் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகவே உள்ளன. சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் தொடக்கப்பள்ளிகள் அல்லது இடைநிலைப்பள்ளிகளில் தகுந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவர்," என்று அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குத் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களான 'தகவல் பரிமாற்றத் திறன் பலகைகளை' (Interactive Smart Board) வழங்கும் நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, மார்ச் 2 முதல் 20-ஆம் தேதி வரை 20,000 ஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கல்வி இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமது முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

2026-2035-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாகவே இந்த மிகப்பெரிய அளவிலான ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு முதல் ஆறு வயதுக் குழந்தைகள் விருப்பத்தின் பேரில் முதலாம் ஆண்டில் சேர அனுமதிக்கப்படவுள்ளதால், தொடக்கப்பள்ளிகளில் ஏற்படும் கூடுதல் மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்க இந்த நியமனம் உதவும் என்று வோங் கா வோ விளக்கினார்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள 45 தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா ஒரு திறன் பலகை வீதம் மொத்தம் 540,000 வெள்ளி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவின் (MITRA) முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களிடையே நவீன மின்னியல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, கற்றல் முறையை மேலும் ஆக்கப்பூர்வமானதாக மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.