கோலாலம்பூர், ஜன 13– பள்ளிகளில் பெருகி வரும் பகடிவதை சம்பவங்களைக் கட்டுப்படுத்த, அரச மலேசிய போலீஸ் படையுடன் இணைந்து கல்வி அமைச்சு (KPM) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளி விடுதி வளாகங்களுக்குள் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து வாகனங்கள் (MPV) நுழைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத் தேசிய போலீஸ் படைத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பள்ளி மற்றும் விடுதி கதவுகள் போலீஸ் ரோந்துப் பணிகளுக்காகத் திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.
ஆர்.டி.எம்மில் நடைபெற்ற 'பிச்சாரா நெரடிப' (Bicara Naratif) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், விரைவில் 'குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை' (Child Protection Policy - CPP) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இக்கொள்கையில் பள்ளியின் அனைத்துத் தரப்பினரும் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும்.
2026-ஆம் ஆண்டில் பள்ளிகளில் 'பூஜ்ஜிய பகடிவதை' (Zero Bully) இலக்கை அடைவதற்குக் கல்வி அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.


