ஷா ஆலம், பிப் 3: புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் பெட்டாலிங் மற்றும் சிப்பாங் மாவட்டங்களை சேர்ந்த 24 வர்த்தகர்கள் RM170,000க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் உபகரண உதவியைப் பெற்றனர்.
சிப்பாங்கில் மொத்தம் 18 வர்த்தகர்கள் RM129,500 மதிப்புள்ள உதவியைப் பெற்றுள்ள நிலையில் பெட்டாலிங் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வர்த்தகர்களுக்கு RM41,157 நிதி ஒதுக்கீட்டில் உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
அனைத்து உபகரண உதவிகளும் இந்த ஜூன் மாதத்திற்குள் பெறுநர்களுக்கு விநியோகிக்கப்படும். பின்னர் அக்டோபரில் அடுத்த கட்டம் தொடரப்படும் என வீ.பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
“இந்த புளூபிரிண்ட் திட்டத்தில் சமையல் உபகரணங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் விற்பனை ரேக்குகள் போன்ற வணிகப் பொருட்களின் வடிவத்தில் உதவி வழங்கப்படும்.
இதற்கிடையில், மற்ற மாவட்டங்களில் பெறுநர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க இந்த வாரம் முழுவதும் விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாகப், புளூபிரிண்ட் உதவிக்காக மொத்தம் RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு I-SEED திட்டத்திற்கு RM1 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என பாப்பாராய்டு தெரிவித்தார்.
புளூபிரிண்ட் உபகரண உதவித் திட்டம், வணிக உபகரணங்கள் அல்லது இயந்திரங்களை வழங்குவதன் மூலம் சிறு வணிகர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஏப்ரல் 2021இல் தொடங்கப்பட்ட I-SEED திட்டம், இந்தியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்கள் ஈடுபட்டுள்ள வணிக வகைக்கு ஏற்ப உபகரண உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


