கோலாலம்பூர், பிப் 3: வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB), நிறுவனத்திடமிருந்து வந்ததாகக் கூறி சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் இது போன்று ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது. அடையாள அட்டை எண், முகவரி அல்லது கணக்குப் பதிவுகள் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் சரிபார்ப்பு இன்றி தொலைபேசியில் வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கையாக, சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்கள், சரிபார்ப்புக்காக 1300-88-5454 என்ற எண்ணில் TNB CareLine தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
திரங்கானு, கோல நெருஸில் உள்ள பத்து ராகிட்டைச் சேர்ந்த 71 வயதுள்ள பெண் ஒருவர் (அரசு ஓய்வூதியதாரர்), தொலைபேசி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு RM50,000 இழந்தார்.
ஜனவரி 29 அன்று, TNB அதிகாரியாகக் காட்டிக் கொண்ட சந்தேக நபரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. பகாங்கில் மின்சாரத் திருட்டுக்காக மாற்றியமைக்கப்பட்ட TNB மீட்டரைப் பதிவு செய்ய பாதிக்கப்பட்டவரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, பின்னர் காவல்துறை அதிகாரியாகக் காட்டிக் கொண்ட சந்தேக நபரின் நண்பருடன் தொடர்பு இணைக்கப்பட்டுள்ளதாகக் கோல திரங்கானு மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நூர் கூறினார்.
சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து, பாதிக்கப்பட்டவர், சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மொத்தம் RM50,000 பணத்தை மாற்றியுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபர் தன்னைத் மோசடி செய்துள்ளதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்ததாக அஸ்லி கூறினார்.
- பெர்னாமா


