உலு சிலாங்கூர், பிப் 1- உலு சிலாங்கூர் மாவட்டத்தை உட்படுத்திய தைப்பூச கொண்டாட்டம் மற்றும் கலை இரவு கெர்லிங் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்கு சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் தலைமை தாங்கி அதிகாரப்பூர்வமாக கலந்து சிறப்பித்தார்.

தமது மனைவியுடன் வருகை தந்த அவர், உள்ளூர் மக்களிடையே நிலவும் கலாசாரப் பிணைப்பையும் நல்லிணக்கத்தையும் பாராட்டி உரையாற்றினார். உலுசிலாங்கூர்நகராண்மைக் கழகத்தின் (MPHS) செயலாளரும் துணைத் தலைவருமான புவான் தேவி திர்வானா பிந்தி முனாசிர், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பன்முகத்தன்மை, கலாச்சார மேன்மை மற்றும் சமூகங்களுக்கிடையிலான நெருக்கமான உறவை மேம்படுத்துவதில் நகராண்மைக் கழகம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அவரது வருகை உறுதிப் படுத்தியது.
மேலும், இந்த விழாவில் கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பாங் சாக் தாவோ, நகராண்மைக் கழக உறுப்பினர்களான புவான் லாவ் சூட் பெங், திரு. புவனேஸ்வரன் பச்சமுத்து மற்றும் நகராண்மைக் கழகத்தின் கார்ப்பரேட் பிரிவுத் தலைவர் புவான் ஜுனைனா அப்துல்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அரங்கேறிய இந்த விழா, அப்பகுதி வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு பாலமாகவும் அமைந்தது.


