முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான முன் ஏற்பாடுகளை கல்வி அமைச்சகம் தொடங்கியது

30 ஜனவரி 2026, 8:24 AM
முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான முன் ஏற்பாடுகளை கல்வி அமைச்சகம் தொடங்கியது

ஈப்போ, ஜன 30 — அடுத்த ஆண்டு ‘இரட்டை குழு (Double Cohort)’ நிலைமையின் கீழ், முதலாம் வகுப்பு (Year One) மாணவர்களை சேர்க்க பள்ளிகள் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்ய, கல்வி அமைச்சகம் (MOE) முன்கூட்டியே ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

‘இரட்டை குழு’ என்பது ஆறு மற்றும் ஏழு வயதுடைய குழந்தைகள் ஒரே நேரத்தில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுவது என்பதாகும். இதனை முன்னிட்டு, பள்ளி நடவடிக்கைகள், ஆசிரியர் நியமனம் மற்றும் வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட அம்சங்களில் அமைச்சகம் ஆரம்ப கட்டத் திட்டமிடலை தொடங்கியுள்ளது என துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

மார்ச் 31க்குப் பிறகு பதிவு செய்யப்படும் ஆறு வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கையை கல்வி அமைச்சகம் கண்காணித்து, பள்ளி மட்டத்தில் தேவையான ஏற்பாடுகளை மதிப்பிடும் மற்றும் பெற்றோருக்கு தெளிவான முடிவெடுக்க போதிய நேரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியரின் எண்ணிக்கை மற்றும் வசதிகள் தொடர்பாக கல்வி அமைச்சகம் முன்கூட்டியே திட்டமிடலை தொடங்கியுள்ளது.

“மடாணி அரசின் கீழ், தேசியப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர் நியமன விகிதம் 95 சதவீதத்திலிருந்து 97 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும், அதிகமான புதிய ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவது குறித்து கல்வி சேவை ஆணையம் (SPP) உடன் அமைச்சகம் கலந்துரையாடி வருவதாகவும், ஆசிரியர் கல்வி நிறுவனம் (IPG) மூலம் பயிற்சி பெறுவதற்குப் பொதுவாக ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இடைக்கால தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாகவும் வோங் தெரிவித்தார்.

அத்துடன், குறிப்பாக அதிக மாணவர்களால் வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளைக் கல்வி அமைச்சகம் அடையாளம் கண்டு வருவதாகவும், Industrialised Building System (IBS) முறையின் மூலம் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

“IBS முறையை பயன்படுத்துவதன் மூலம், கூடுதல் வகுப்பறைகள் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் முடிக்க முடியும். பாரம்பரிய கட்டுமான முறையில் இது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த அணுகுமுறை சைபர்ஜெயாவில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

வகுப்பறை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து, இறுதி கணக்குகளை அறிவிக்கும் முன், உண்மையான தேவைகள் இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக வோங் தெரிவித்தார்.

“நெரிசல் மிகுந்த பள்ளிகள் குறித்த தரவுகள் எங்களிடம் உள்ளன. ஆனால், நெரிசல் இல்லாத- பள்ளிகளிலும் வசதிகள் போதுமானதாக உள்ளனவா என்பதை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.