ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப்: பைசால் ஹாலிமின் இரட்டை கோல்கள்; சிலாங்கூர் எஃப்சி வெற்றி

29 ஜனவரி 2026, 4:08 AM
ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப்: பைசால் ஹாலிமின் இரட்டை கோல்கள்; சிலாங்கூர் எஃப்சி வெற்றி

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 29 – ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் 2025/2026 காற்பந்துப் போட்டியின் ‘குரூப் ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், சிலாங்கூர் எஃப்சி (Selangor FC) அணி 2-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமின் காங் ஆன் ஹனோய் (Cong An Hanoi FC) அணியைத் தோற்கடித்தது. நட்சத்திர வீரர் முகமது பைசால் ஹாலிம் அடித்த இரண்டு அதிரடி கோல்கள், அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது.

​பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கில் (MBPJ) நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்திலேயே விருந்தினர் அணியான ஹனோய் எஃப்சி கோல் அடிக்க முயற்சித்தது. எனினும், அந்த அணியின் வீடாவ் (Vitao) உதைத்த பந்தை சிலாங்கூர் அணியின் கோல்கீப்பர் கலிமுல்லா அல்-ஹபீஸ் லாவகமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் முதல் பாதியில் சிலாங்கூர் அணிக்கு கோல் அடிக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பை மாமது தியாரா (Mamadou Diarra) தவறவிட, முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

​இரண்டாவது பாதியில் ஆட்டம் சூடுபிடித்த வேளையில், 60-ஆவது நிமிடத்தில் சிலாங்கூர் காத்திருந்த முதல் கோல் கிடைத்தது. ஆல்வின் ஃபோர்ட்ஸ் அடித்த பந்தை எதிரணி கோல்கீப்பர் பிலிப் நுயென் சரியாகத் தடுக்கத் தவறிய நிலையில், அங்கிருந்து மீண்டு வந்த பந்தை பைசால் ஹாலிம் மிக லாவகமாக வலைக்குள் தள்ளினார். அதனைத் தொடர்ந்து 69-ஆவது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து மின்னல் வேகத்தில் பந்தை உதைத்து பைசால் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம் சிலாங்கூர் எஃப்சி 2-0 என முன்னிலை பெற்றது.

​எஞ்சிய நேரத்தில் ஹனோய் அணி பதில் கோல் அடிக்கப் போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் சிலாங்கூர் அணி 8 புள்ளிகளுடன் ‘குரூப் ஏ’ பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ள தனது இறுதிப் பிரிவு ஆட்டத்தில், தாய்லாந்தின் பிஜி பாதும் யுனைடெட் (BG Pathum United) அணியை சிலாங்கூர் எதிர்கொள்ளவுள்ளது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.