காஜாங், ஜன 28- காஜாங், ஜாலான் பெர்சியாரான் டாமாய் பெர்டானாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று தானாக நகர்ந்து சென்று ஐந்து வாகனங்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறுகையில், பிற்பகல் 12.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மொத்தம் ஆறு வாகனங்கள் சிக்கியதாகத் தெரிவித்தார்.
விசாரணையின்படி, லாரி ஓட்டுநர் உணவருந்துவதற்காக லாரியைச் சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்றிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி தானாகவே நகரத் தொடங்கி, சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தினால் வாகனங்கள் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1)-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


