கோலாலம்பூர், ஜன 28- இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் (West Bengal) நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சு (KKM) நாட்டின் அனைத்து அனைத்துலக நுழைவாயில்களிலும் சுகாதாரச் சோதனைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தொற்று அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கூடுதல் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையில், தேசிய ஆய்வகங்களின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், களப்பணிகளில் சுகாதார குழுவினர் தீவிரமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மலேசியாவில் 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிபா வைரஸ் பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், அண்டை நாடுகளில் அவ்வப்போது இத்தொற்று காணப்படுவதால் நாடு முழு விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
'ஒரே ஆரோக்கியம்' (One Health) எனும் அணுகு முறையின் கீழ், கால்நடைச் சேவைத் துறை மற்றும் வனவிலங்குத் துறையுடன் இணைந்து தொடர் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, மலேசியாவில் உள்ள வளர்ப்புப் பிராணிகளிடமோ அல்லது வனவிலங்குகளிடமோ நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


