கோலாலம்பூர், ஜன 28 - 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் உரிமையாளர்கள் இப்போது தங்கள் பழைய வாகனங்களை புதிய வாகனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
பழைய வாகனங்களை அகற்றி, புதிய, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் வகையில், அரசு RM10 மில்லியன் இணை மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த திட்டம் 2026 பட்ஜெட்டின் கீழ் செயல்படுத்தப்படுவதுடன், நாடு முழுவதும் சுமார் 5,000 வாகன உரிமையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தில் புரோட்டான் மற்றும் பெரோடுவா நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி பெறும் ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் அதிகபட்சம் RM2,000 வரை அரசு மானியம் வழங்கப்படும். அதே அளவு தொகையை உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதால், புதிய வாகனம் வாங்கும் செலவு குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
பழைய வாகனங்கள் பாதுகாப்பு குறைவானவை, அதிக எரிபொருள் செலவழிப்பு மற்றும் அடிக்கடி பழுதடையும் என்பதால், அவற்றை சாலையிலிருந்து அகற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முயற்சி சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வாகனத் துறையை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


