ஷா ஆலம், ஜன 26: சமூக ஊடகங்களில் பரவி வரும், சோதனை முறை இல்லாமல் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்ற விளம்பரத்தை சிலாங்கூர் சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) மறுத்துள்ளது.
இந்தத் தகவலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறி, அந்த விளம்பரம் தவறான தகவலை வெளியிட்டுள்ளது என்றும், பொதுமக்களை மோசடி செய்யும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் ஜேபிஜே உறுதி செய்துள்ளது.
“விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அந்த விளம்பரத்தில் ஜேபிஜே சிலாங்கூர் இயக்குநரின் படத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளனர். இது பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுத்துகிறது மற்றும் துறையின் நம்பிக்கையை பாதிக்கிறது,” என்று அறிவிப்பு முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், சோதனை முறைகள் இல்லாமல் இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் எந்தவொரு சலுகை அல்லது தகவலை நம்பி எளிதில் ஏமாற்றப்பட வேண்டாம் என ஜேபிஜே சிலாங்கூர் கேட்டுக்கொண்டுள்ளது.
“பொதுமக்கள் எப்போதும் ஜேபிஜே அதிகாரப்பூர்வ தளங்களில் தகவல்களை சரிபார்க்கவும், மோசடிக்கு இலக்கு ஆகாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


