ஷா ஆலம், ஜனவரி 25 — காஜாங்கில் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதையின் நடுவில் ஒரு ஆடவர் கால் மடக்கி அமர்ந்திருந்த சம்பவம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன், சாலை பயனாளர்களுக்கு ஆபத்தையும் விளைவித்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஜாங் மாவட்ட காவல் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப் பட்டது என்றார்.
“அந்த ஆடவர் அவசர பாதையில் நிறுத்தப் பட்டிருந்த லாரியின் ஓட்டுநர்,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார். பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட 21 வினாடி வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் ஒரு ஆடவர் தொலைபேசியைப் பிடித்தபடி சாலையின் நடுவில் கால்மடக்கி அமர்ந்திருப்பதும், வரும் வாகனங்கள் அவரை மோதாமல் இருக்க பாதையை மாற்றுவதும் தெரிகிறது.இந்த வழக்கு, வாகனத்தை நிறுத்தும் முறையால் மற்ற சாலை பயனாளர்களுக்கு இடையூறு, ஆபத்து அல்லது தேவையற்ற சிரமம் ஏற்படுத்திய குற்றம் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அஜாக்கிரதை அல்லது பொறுப்பற்ற நடத்தை ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று நாஸ்ரோன் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் உள்ள பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


