ஈப்போ, ஜனவரி 23 – தேசியப் பதிவுத்துறை (JPN) கடந்த ஆண்டு முழுவதும் 3,607 மெக்கார் (MEKAR - Menyemai Kasih Rakyat) திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அவற்றில் 732 திட்டங்கள், களமிறங்கும் அணுகுமுறையைப் பயன்படுத்திய மெக்கார் சமூகத் திட்டங்களாகும்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகள் தொடர்ந்து வலுப்படுத்த படுவதை உறுதிசெய்ய, மடாணி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இந்த அணுகுமுறையை ஜே.பி.என். தொடர்ந்து பயன்படுத்தும் என்று அதன் அறிக்கை குறிப்பிடுகிறது.
"குறிப்பாக, கிராமப்புற மற்றும் அணுகுவதற்கு கடினமான பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினருக்கு தேசியப் பதிவு சேவைகள் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்ய, மெக்கார் சமூகத் திட்டத்தின் மூலம் களமிறங்கும் அணுகுமுறையை ஜே.பி.என். தொடர்ந்து செயல்படுத்தும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெக்கார் சமூகத் திட்டத்தின் கீழ், கிரிக் அருகே உள்ள ரோயல் பெலும் உள் காட்டுப் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒராங் அஸ்லி சமூகத்தினருக்கு அடையாள ஆவணங்களை தேசியப் பதிவு துறை வழங்கியது.
கம்போங் சுங்கை கெஜாரில் 31 பேரும், கம்போங் சுங்கை தியாங்கில் (RPS பனூன்) 21 பேரும் இந்த ஆவணங்களைப் பெற்றனர்.
வழங்கப்பட்ட ஆவணங்களில் மை காட், பிறப்புச் சான்றிதழ்கள் (தாமதமான பதிவு) மற்றும் மைக்கிட் ஆகியவை அடங்கும். இதன் மூலம், அரசாங்க மானியங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பல்வேறு முக்கிய சேவைகளைப் பெறுநர்கள் அணுக முடியும்.
காட்டுப் பொருட்களை சேகரிப்பது, கிராம வேலைகள் மற்றும் மீன் பிடித்தல் போன்ற தொழில்களை செய்யும் இச்சமூகத்தினரின் சுமையை இந்த மெக்கார் சமூகத் திட்டம் குறைத்துள்ளது.
பேராக் ஜே.பி.என். மற்றும் பேராக் மாநில ஒராங் அஸ்லி முன்னேற்றத் துறையின் (JAKOA) ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் மற்றும் ஜே.பி.என். உயர் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பேராக் மற்றும் கெடா JAKOA துணை இயக்குநர் கைருல் அமிலின் இப்ராஹிம், உலு பேராக் மற்றும் பாலிங் மாவட்ட ஒராங் அஸ்லி முன்னேற்ற அதிகாரி சக்காரியா முகமட் நூர் மற்றும் இரு கிராமங்களின் தலைவர்களும் (டோக் பாத்தின்) உடனிருந்தனர்.


