கோலாலம்பூர், ஜன 22 – நாட்டின் தொழிலாளர் சக்தியிடையே ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்துவதற்காக மனிதவள அமைச்சு (KESUMA) மூன்று முக்கிய வியூகங்களைச் செயல்படுத்தி வருவதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய மொழியான மலாய் மொழியின் அந்தஸ்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப படிப்படியாகவும் உள்ளடக்கிய முறையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தொழிற்பயிற்சி மற்றும் கல்விப் பயிற்சி திட்டம் (TVET) மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதில் ஆங்கிலப் புலமை முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
TVET பாடத்திட்ட மேம்பாடு, திறன் பயிற்சி நிறுவனங்களில் இருமொழி பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துதல், பணிச் சூழல் சார்ந்த பயிற்சி முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆங்கில மொழியில் விளக்கக்காட்சிகள் (Presentations) மற்றும் மதிப்பீடுகளை நடத்துதல்.
உலகளாவிய தொழில்துறைக்கு ஏற்றவாறு, மேம்பட்ட உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் (ICT), விண்வெளி மற்றும் வாகனத் துறைகளில் 90 சதவீத தரநிலைகள் ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
HRD Corp மூலம் இயங்கும் இத்தளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட இலவசப் பாடநெறிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஆங்கிலத் தொடர்பு மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் பாடங்களை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் எளிதாகப் பயில முடியும்.
தற்போதைய உலகளாவிய பணிச்சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம் (Automation) ஆகியவற்றால் இயக்கப்படுவதால், புதிய பணியாளர்களுக்கு ஆங்கில மொழித் திறன் ஒரு தவிர்க்க முடியாத அடிப்படைத் தகுதியாக மாறியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


