கோலாலம்பூர், ஜன 21- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) பணியாற்றும் அரச மலேசியச் சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரும் கட்டாயப் பணி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
துறையின் நேர்மைத் தன்மையை வலுப்படுத்தவும், வெளிப்படையான பணிச் சூழலை உறுதிப்படுத்தவும் இந்த விரிவான பணி சுழற்சி முறை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறை இயக்குநர் சுல்கிப்லி முஹம்மது, ஊழல் மற்றும் சர்வதேச கடத்தல் கும்பல்களின் சவால்களை எதிர்கொள்வதில் அதிகாரிகளின் பொறுப்புணர்வையும் ஒழுக்கத்தையும் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார்.
அதிகாரிகளின் இடமாற்றம் மட்டுமின்றி, முறைகேடுகளைப் புகாரளிக்கும் தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'விசில்புளோயர்' (Whistleblower) கொள்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளாக அதிகாரிகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க வழக்கமான சிறுநீர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
போதைப்பொருள் பழக்கம் ஒரு அதிகாரியின் நேர்மையைச் சீர்குலைக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரிகள் 'பாடி கேமரா' (Body Camera) எனப்படும் உடலில் அணியும் கேமராக்களைப் பயன்படுத்துவது பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளதாக சுல்கிப்லி சுட்டிக்காட்டினார்.


