ஜொகூர் பாரு, ஜன 14- சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட கார் ஒன்று ரோன் 95 எரிபொருளை நிரப்பியதாக கூறப்படும் நிலையில் கூலாய் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநருக்கு 9 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மாஜிஸ்டிரேட் ஆர். ஷாலினி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட 64 வயதுடைய லோங் ச கொவ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விதிக்கப்பட்ட அபராதத்தை குற்றஞ்சாட்டப்பட்டவர் கட்ட தவறினால் அவர் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஜாலான் ஜொகூர் பாரு- ஆயர் ஹித்தாம் எனும் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட கார் ஓட்டுநரான அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க வழி செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 108(3) இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


