வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை

8 ஜனவரி 2026, 9:50 AM
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை

புத்ராஜெயா, ஜன 8 - இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் குடியுரிமை அல்லாத துணையைத் திருமணம் புரிந்த மலேசியப் பிரஜை தாயாருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு தானியங்கி முறையில் குடியுரிமை வழங்குவது அமலுக்கு வரும்.

தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமைப் பெறுவதில் நீண்ட காலமாக சிரமங்களை எதிர் கொண்ட தாய்மார்களுக்கு நீதியை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கத்தின் மிகப்பெரிய அடைவு நிலையை இந்நடவடிக்கை  எட்டுகிறது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விவரித்தார்.

குடியுரிமை தொடர்பாக கூட்டரசு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சின் திட்டங்களுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டு குடியுரிமை ஒழுங்குமுறை சட்டத்தின் இரண்டு மொழிகள் அதாவது மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் திருத்தம், மேற்கொள்ளப் பட்டதால், இந்த திட்டத்திற்கு நீண்ட காலம் எடுத்ததாக அவர் கூறினார்.

"இரண்டு மொழிகளையும் தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி மதிப்பாய்வு செய்துள்ளது. அது நிறைவடைந்தால், நாங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பாராங்களைத் தயார் செய்வோம்.

பின்னர், உலகம் முழுவதும் உள்ள மலேசிய பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்து, மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதல் பெற்று அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யும் செயல்முறையாகும்," என்றார் அவர். 

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.