ஷா ஆலாம், ஜன 5- பத்துமலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் வரும் ஜனவரி 31ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு மேல் பத்துமலை வளாகத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படும்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு வருகை புரிகிறார்கள்.
இந்த விழாவில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரிக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படும். அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50 இந்து கோவில்களுக்கு குறைந்தது 4 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கும் முதல் கட்ட நிகழ்வாக இது விளங்கும் என்று கருத்துரைத்தார்.
தைப்பூசத் திருவிழா எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக இந்துக்களால் கொண்டாடப்பட்வுள்ளது. பத்துமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








