ஷா ஆலம், ஜனவரி 5- ரஹ்மா ரொக்க உதவி திட்டத்தின் முதல் கட்டமாக, தகுதி பெற்ற பெறுநர்களுக்கு அதிகபட்சமாக RM500 வரை வரும் ஜனவரி 20 தேதி முதல் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
ரஹ்மா அடிப்படை உதவி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் அதிகபட்சமாக RM200 வரை வழங்கப்படும் தொகை, வரும் ஜனவரி ஒன்பதாம் தேதியிலேயே செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார் .
"கடந்த ஆண்டு RM100 சாரா உதவித் திட்டம் அதிக பயன்பாட்டு விகிதத்தைப் பதிவு செய்தது. ஒதுக்கப்பட்ட நிதியில் 96 விழுக்காடு, அதாவது RM2.1 பில்லியன், மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செலவிடப்பட்டது," என்று அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பிரதமர் துறை (JPM) ஊழியர்களுடனான சந்திப்பில் 2026 புத்தாண்டுச் செய்தியை வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம், நிதி அமைச்சருமான அன்வார், 18 வயதுக்கு மேற்பட்ட 22 மில்லியன் மக்களுக்கு MyKad மூலம் RM100 சாரா உதவி வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
இந்த RM100 வரவு, கடந்த டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் உள்ள 7,300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு STR மற்றும் சாரா திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு RM15 பில்லியனை எட்டியது. இது நாட்டின் ரொக்க உதவி வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பாகும்.


