கோலாலம்பூர், டிசம்பர் 22- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் கோரிக்கையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் வீட்டுக் காவலில் வைப்பதற்கு குறைக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க நஜிப் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
இந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஆலிஸ் லோக் இன்று காலை தள்ளுபடி செய்தார். 16ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரச ஆணை சட்டத்தின்கீழ் செல்லாது என்றும் மத்திய அரசியலமைப்பின் 42-ஆவது கட்டுரையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அந்த கூடுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதன் மூலம், வீட்டுக் காவல் உத்தரவை அமல்படுத்த மலேசிய அரசுக்கு எந்தவித சட்டப்பூர்வ கடமையும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின் , நஜீபின் முதன்மை பாதுகாப்பு வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷஃபீ அப்துல்லா, இன்றைய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.








