கோலாலம்பூர், டிசம்பர் 22- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான விண்ணப்பத்தின் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் நஜிப் ரசாக்கின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று காலை 7 மணி முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.
நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சூழல் ஒற்றுமையின் அடையாளமாக, நஜிப்பிற்கு நீதி, போஸ்கூவை விடுதலை செய், எப்போதும் போராடுவோம் போன்ற ஆதரவு முழக்கங்களால் நிரம்பி உள்ளது. தீபகற்பத்தின் வடக்குப் பகுதி உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் காலை 8.40 மணியளவில் காஜாங் சிறையிலிருந்து வருகை புரிந்தார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அரசாங்கத்தையும் மற்ற ஆறு தரப்பினரையும் பதிலளிக்கவும், கடந்த ஆண்டு ஜனவரியில் மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரிய நஜிப்பின் மேல்முறையீட்டை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


