ஷா ஆலம், டிச 10 — ஆகஸ்ட் மாதத்தில் சுங்கை பூலோவில் உள்ள கம்போங் குபு காஜாவில் ஏற்பட்ட புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட 10 குடும்பத் தலைவர்களுக்கு எம்பிஐ அறக்கட்டளை உதவி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சொத்துக்கள் மற்றும் வீட்டு கூரைகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து சுமையைக் குறைக்க RM1,000 வீதம் பெற்றுள்ளனர் என எம்பிஐ அறக்கட்டளையின் செயல் அதிகாரி டத்தோ சை போல்யாசான் எம். யூசுப் தெரிவித்தார்.
“சிலாங்கூரில் எப்போது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் எம்பிஐ உதவத் தயாராக உள்ளது. இந்த முயற்சி, பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும்,” என்று அவர் உதவி வழங்கும் நிகழ்ச்சியின் போது ஊடகங்களுக்கு கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான தகவல்கள் மாவட்ட பேரழிவு பிரிவின் மூலம் சேகரிக்கப்பட்டு, தகுதி நிர்ணயிக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன என அவர் விவரித்தார்.
“ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தரவு சேகரித்து உதவியை உடனடியாக வழங்குவதற்காக அது கிராமத் தலைவரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவியை வழங்கிய எம்பிஐ அறக்கட்டளையின் அக்கறைக்கு நன்றி தெரிவித்தார் பாயா ஜெராஸ் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முகமட் கைருடின் ஓத்மான்.
“எம்பிஐ அறக்கட்டளை மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை எளிதாக்குகிறது. புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவி, மாநிலம் முழுவதும் பல்வேறு குழுக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.


