ஷா ஆலம், பிப் 6: கோல லங்காட்டில் அமைந்துள்ள ஜென்ஜாரோம், தாமான் செஜாத்தேராவில் புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குப் பழுதுபார்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாநில அரசு விரைவுபடுத்தும்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 11 வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், மேலும் பல வீடுகள் மரங்கள் விழுந்ததாலும் கட்டமைப்பு சேதங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவள மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
“இன்று நான் தாமான் செஜாத்தேராவில் புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளின் நிலையை ஆய்வு செய்யச் சென்றேன். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் வீடுகளின் நிலையை நேரில் பார்த்து, உடனடித் தேவைகளைப் பற்றி கேட்டறிந்தேன்,`` என்றார் அவர்.
“மாநில அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் சேத மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்தி, பழுதுபார்ப்பு மற்றும் நலன்புரி உதவிகளை வழங்கும்,” என்று பாப்பாராய்டு முகநூலில் பதிவில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவ விரைவாகச் செயல்பட்ட கவுன்சில் உறுப்பினர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் பந்திங் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
முன்னதாக, ஒரு சிறிய சூறாவளி, கோலா லங்காட்டில் உள்ள தாமான் ஸ்ரீ மேடான் ஜெயா, தாமான் செஜாத்தேரா மற்றும் சிஜங்காங்கில் உள்ள கம்போங் ஓராங் அஸ்லி புசுட் பாரு உள்ளிட்ட பல பகுதிகளைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.


