கோலா சிலாங்கூர், டிச 2: இங்குள்ள கம்போங் அசாஹான் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, சுங்கை சிலாங்கூர் வெள்ளக் தணிப்பு திட்டம் (RTB) விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போதையே நிலைமையை கருத்தில் கொண்டு RM20 மில்லியன் மதிப்புள்ள இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் மெலாவத்தி மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ் தீபன் தெரிவித்தார். இந்த முடிவு நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் (JPS) மதிப்பீட்டுக்குப் பிறகு எடுக்கப்பட்டது.
“கம்போங் அசாஹான் இடையறாத வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். இதில் குறிப்பாக மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (WCE) கட்டுமானத்திற்குப் பிறகு, கனமழை பெய்தால், நதி நீர் நிரம்பி வழிந்து கால்வாயில் பாய்ந்து, பின்னர் வீடுகளில் புகுகிறது.
“நீரைத் நதிக்குத் திருப்ப பம்ப் செய்யும் முறை இப்போது பயனுள்ளதாக இல்லை. இதனால், ஜேபிஎஸ் வெள்ளத் தணிப்பு திட்டத்தை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் நீர்மட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் கம்போங் அசாஹான், கம்போங் தஞ்சோங் சியாம், கம்போங் செபாகாட் மற்றும் கம்போங் குவாந்தான் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் வாழும் 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நன்மை தரும்.
தொடர்ச்சியாக ஒரு வாரம் நீடித்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சீர்செய்ய ஜேபிஎஸ் நான்கு சிறிய பம்புகளை கூடுதலாக நிறுவியுள்ளது.
“தற்போது ஐந்து பம்ப்கள் செயல்படுகின்றன. இதில் 2017 முதல் பயன்படுத்தப்பட்ட ஒரு பம்ப் அதன் திறனைச் சரியாக வழங்க முடியாமல் உள்ளது. அதனால், நாங்கள் நான்கு கூடுதல் பம்புகளை சேர்த்துள்ளோம், இதனால் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதை வேகப்படுத்த முடியும்,” என்றார்.
மேலும், தற்போதுள்ள பம்ப்கள் தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படும் என்றும், அவை முழுத் திறனுடன் இயங்குவதை உறுதிப்படுத்துவோம் என அவர் கூறினார்.




