ஷா ஆலம், மார்ச் 2: மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூரிலிருந்து தோஹா (DOH), ஜேடா (JED) மற்றும் மடீனா (MED) ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் மலேசியா ஏர்லைன்ஸ் (MAS) வரும் புதன்கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் இன்று வரை ஏற்கனவே சில ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 1 முதல் மார்ச் 4 வரை திட்டமிடப்பட்டிருந்த MH150, MH151, MH156, MH157, MH160, MH161 உள்ளிட்ட பல விமானச் சேவைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், லண்டன் மற்றும் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையங்களுக்கான சேவைகள் தற்போதைய நிலவரப்படி மாற்றமின்றி தொடரும் என்றும், அந்த விமானங்கள் மோதல் பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதோடு, தேவைப்படுபவர்களுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகளுக்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் சூழல் குறித்து மேலும் மதிப்பீடு செய்யப்படும் வரை இந்த இடங்களுக்கான விமானச் சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என மலேசியா ஏர்லைன்ஸ் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'My Booking' அம்சம் வழியாகத் தொடர்பு விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் உதவி தேவைப்படும் பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'Live Chat' சேவையைப் பயன்படுத்தலாம் அல்லது மலேசியாவிற்குள் 1 300 88 3000 என்ற எண்ணிற்கும், வெளிநாடுகளிலிருந்து +603 7843 3000 என்ற எண்ணிற்கும் மலேசியா ஏர்லைன்ஸ் உலகளாவிய அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். தற்போதைய நிலவரங்களை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கே தாங்கள் எப்போதும் முதலிடம் வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.







