ஷா ஆலம், நவ 11 - நாட்டின் கடனை RM100 பில்லியனிலிருந்து RM77 பில்லியனாகக் குறைப்பதில் மலேசிய அரசு வெற்றி பெற்றுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது தேசிய அடிப்படை முதலீட்டு திட்டங்கள் அல்லது முக்கியமான வளர்ச்சி திட்டங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என அவர் வலியுறுத்தினார்.
கடன் குறைந்தபோதும் கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் வெள்ளத் தடுப்பு திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் தேவையான முதலீடுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என அன்வார் கூறினார்.
“அரசின் புதிய கடன் தொகை 2022 இல் RM100 பில்லியனாக இருந்தது. அது தற்போது RM77 பில்லியனாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அடிப்படை உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி திட்டங்களை புறக்கணிக்காமல் இருப்பதற்காக அரசு கடனைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அமினொல்ஹுடா ஹாசன் (ஸ்ரீ காடிங்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த முதலீடு RM384.2 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், உலக போட்டித் திறன் தரவரிசை (World Competitiveness Ranking - WCR) 2025இல் மலேசியா 11 இடங்கள் முன்னேறி, கடந்த பத்து ஆண்டுகளில் தனது சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இந்த முன்னேற்றம் மலேசியாவின் நிதி மேலாண்மை ஒழுங்கையும், பொருளாதார திசையும் சரியான பாதையில் இருப்பதைக் காட்டுகின்றன. மேலும் மடாணி பொருளாதாரக் கொள்கை எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


