ஷா ஆலம், நவ 8- மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றி முத்திரை பதித்த பத்து பத்திரிகையாளர்கள் இன்று சிறப்பு செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அவர்கள் தலைமையில் இன்று காலையில் ஷா ஆலம் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற விழாவில் இவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மூத்த பத்து பத்திரிகையாளர்களின் பெயர்களை சிபாரிசு செய்தது.
அந்த வகையில் மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் டத்தோ எம் இராஜன், மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். இராஜன், மலேசிய நண்பன் செய்தி ஆசிரியர் செ.வே. மலைச்செல்வன், மலேசிய நண்பன் இணை ஆசிரியர் திருமதி ராஜேஸ்வரி கணேசன், வணக்கம் மலேசியா ஆசிரியர் கே.பத்மநாதன், தமிழ் மலர் ஆசிரியர் கு.தேவேந்திரன், மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி மலையாண்டி, தமிழ் நேசன் புகைப்படக் கலைஞர் எஸ்.எம்.சுந்தர், மக்கள் ஓசை ஆசிரியர் எம்.எஸ். மலையாண்டி மற்றும் மலேசிய நண்பன் ஞாயிறு ஆசிரியர் ரெங்கசாமி சின்னராசு ஆகியோர் சிறப்பு செய்யப்பட்ட பத்து மூத்த பத்திரிகையாளர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அவர்கள் பத்து மூத்த பத்திரிகையாளர்களை பாராட்டி கெளரவித்தார்.
இவர்கள் அனைவரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் பணியாற்றி சாதனை படைத்தவர்கள் ஆவர்.
இந்த விழாவில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், உதவித் தலைவர் ரவி முனியாண்டி, ஆட்சிக் குழு உறுப்பினர் இராமன் குட்டி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.




