கோலாலம்பூர், அக் 30 — இந்த ஆண்டில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் சுமார் RM20 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நாட்டில் கடுமையான வறுமை விகிதம் 0.09 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசாங்கம் மற்றும் மாநில இஸ்லாமிய மன்றம் ஆதரவுடன், சமூக நலத் துறை உதவி உட்பட ரஹ்மா (RAHMAH) உதவித் தொகை (STR), ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, i-SARA ஆகியவையும் இதில் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார்.
“பட்டியலில் மீதமுள்ள 0.09 சதவீதம் கடுமையான வறுமை (hardcore poverty) வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இது ஆண்டு தொடக்கத்தின் இருந்த ஆரம்ப தரவு மட்டுமே. தற்போது, அந்த பட்டியலில் உள்ள அனைத்து வழக்குகளும் தீர்க்கப்பட்டுள்ளன. இதை செய்யும் பணியில் மத்திய அரசு மட்டுமன்றி, மாநில அரசுகள் மற்றும் மாநில இஸ்லாமிய சமூகம் கவுன்சில்களும் ஒத்துழைத்துள்ளன.” என்றார் பிரதமர்.
தீவிர வறுமை மற்றும் ஒட்டுமொத்த வறுமை பிரச்சனையை நிவர்த்தி செய்வதில் மடானி அரசாங்கத்தின் அடைவுநிலை குறித்து கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் டுல்கர்னைன் அப்துல் காலிட்டின் கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
கிளந்தான் மற்றும் கெடா உள்ளிட்ட மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பின் வழி தீவிர வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெர்னாமா




