சுங்கை பட்டாணி, அக் 27: சாலைப் பயணிகள் தங்களின் போக்குவரத்து சமன்களை 50 சதவீத தள்ளுபடி சலுகையுடன் செலுத்த இரண்டு மாத காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை அமலில் இருக்கும் என போக்குவரத்து துறை (ஜேபிஜே) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபேட்லி ரம்லி தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் இந்த இரண்டு மாத காலத்தைப் பயன்படுத்தி தங்கள் நிலுவை சமன்களைத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறோம். இந்த தள்ளுபடி அனைத்து வகை சமன்களுக்கும் பொருந்தும், ஆனால் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய, அதாவது கட்டணம் மூலம் செலுத்த முடியாத சமன்களுக்கு இது பொருந்தாது என்றார்.
மேலும் மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் சமன்களைச் செலுத்தி விட வேண்டும், ஏனெனில் 2026 ஜனவரி 1 முதல் எந்தவித தள்ளுபடியும் வழங்கப்படாது என்றார். இதற்கிடையில், ஜேபிஜே அக்டோபர் 14 முதல் டிசம்பர் 31 வரை “Op Perang Lebih Muatan” நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது வர்த்தக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரச்சனையை தடுக்கும்வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 27,300 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 1,017 வாகனங்கள் அதிகபட்ச அனுமதியைக் கடந்து பொருட்களை ஏற்றிச் சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 1,696 ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு சமன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு 96 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜேபிஜே பொதுமக்களின் சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்தல், அரசின் உள்கட்டமைப்பை பாதுகாத்தல் மற்றும் போக்குவரத்து துறையில் சட்டத்திற்கு இணங்கும் பண்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து உறுதியாக செயல்படுவதாக அவர் வலியுறுத்தினார்.




