ஷா ஆலம், அக்.16 – கெடா மாநிலத்தின் பாலிங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட குழு பலாத்காரம் மற்றும் அதனைச் சார்ந்த ஆபாச வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நால்வரை, கைது செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 53 வயதுடைய ஒருவரிடமிருந்து போலீசார் புகார் பெற்றனர். அந்தப் புகாராளர் தனது மகளைச் சார்ந்த நிர்வாண வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதை பள்ளி கட்டொழுங்கு ஆசிரியர் தெரிவித்ததாக பாலிங் மாவட்டத்தின் இடைக்கால காவல் துறைத் தலைவர் துணை காவல் அதிபர் அஹ்மத் சலிமி மத் அலி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதே நாளில் இரவு 9.30 மணியளவில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டதாக பெரிட்டா ஹரியன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் விசாரணையில், சந்தேகநபர்கள் நால்வரும் கடந்த மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அந்தப் பள்ளியின் வகுப்பறைகளில் பாலியல் செயல்களிலும், குழு பலாத்காரத்திலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆறு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.