கோலாலம்பூர், செப் 24: BUDI95 திட்டத்திற்கான தகுதிச் சரிபார்ப்பு நாளை முதல் மேற்கொள்ளப்படலாம் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
www.budimadani.gov.my என்ற அதிகாரப்பூர்வ போர்டல் வழியாகவோ அல்லது செடெல் மற்றும் கால்டெக்ஸ்கோ போன்ற செயலிகள் வழியாகவோ இத்திட்டத்திற்கான தகுதிச் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
“பெறப்பட்ட மானியத் தகுதியைக் கண்டறிய பயனர்கள் தங்கள் அடையாள அட்டை எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.
“மேலும் செப்டம்பர் 30 முதல், மானியப் பயன்பாட்டை இச்செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம். வரம்பு மாதத்திற்கு 300 லிட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று RON95 மானியத்தை இலக்காகக் கொண்ட ஊடக மாநாட்டு அமர்வுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
பயனர்கள் புதிய பதிவு செய்யத் தேவையில்லை, ஏனெனில், அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் தகுதிச் சரிபார்ப்பு தானாகவே செய்யப்படுகிறது.
பெட்ரோல் நிலையங்களில், பணம் செலுத்துவதற்கு முன், பயனர்கள் தங்கள் மைகார்ட்டை ரீடரில் செருகுவதன் மூலம் தகுதியை சரிபார்க்கலாம் என்று அமீர் ஹம்சா கூறினார்.
“ரொக்கம், கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது இ-வாலட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். பெட்ரோல் நிரப்பிய பிறகு, ரசீட்டில் பரிவர்த்தனை மதிப்பு, அரசாங்கத்தால் செலுத்தப்படும் மானியத் தொகை மற்றும் பயனரால் லிட்டருக்கு RM1.99 செலுத்தப்பட்ட தொகை ஆகியவற்றைக் காண்பிக்கும்,” என்று அவர் கூறினார்.
மானிய ஒதுக்கீடு மாதத்திற்கு 300 லிட்டராகவே உள்ளது. அதே நேரத்தில் வரம்பை மீறும் நுகர்வோருக்கு தற்போதைய சந்தை விலை வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார்.
குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, RON95 விலை லிட்டருக்கு RM2.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


