கோலாலம்பூர், ஜூலை 27- சுற்றுலாத் துறைக்களுக்கான லைசென்ஸ் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலா, கலை, கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் எச்சரித்துள்ளார்.
சபா மாநிலத்தின் செம்புர்ணாவில் முக்குளிப்பு பயிற்றுநருக்கும் சுற்றுப்பயணிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை சித்தரிக்கும் காணொளி ஒன்று வைரலானது தொடர்பில் கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு முக்குளிப்பு நடவடிக்கையின் போது நிகழ்ந்ததாக கூறப்படுவதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறினார்.
சுற்றுப்பயணி ஒருவர் படகில் தவறான இடத்தில் வைத்த ஆக்சிஜன் சிலிண்டர் தவறி விழுந்து முக்குளிப்பு பயிற்றுநரின் காலில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கை அமைச்சு கண்காணித்து சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்பான விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய சுற்றுலா நடத்துநர்கள் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டிகளை முறையாகப் கடைபிடிக்க வேண்டும் என்று தியோங் வலியுறுத்தினார்.
அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்ய சுற்றுப்பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மற்றும் பயிற்றுநர்கள் மத்தியில் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.