(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 19- கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கிய உயர்கல்விக்கூட மாணவி வைஷ்ணவி சுரேஷூக்கு சுங்கை ராமால் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மஸ்வான் ஜோஹார் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ஷா ஆலம், எம்.எஸ்.யு. பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித் துறையில் இறுதியாண்டில் பயின்று வரும் தனது மகள் வைஷ்ணவி சுரேஷ் இறுதித் தவணைக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் எதிர்நோக்கும் சிரமம் குறித்து அவரின் தாயார் தமக்கு கடிதம் எழுதியிருந்தாக மஸ்வான் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
பணம் செலுத்தப்படாவிட்டால், அவர் தனது இறுதித் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படமாட்டார். மேலும் அவரது கல்வி எதிர்காலம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் அபாயத்தில் இருக்கும். அவரது ஆதங்கம் இதயத்தைத் தொட்டது. நமது இளைஞர்களில் எத்தனை பேர் அறிவுக்காக கடுமையாகப் போராடுகிறார்கள், ஆனால் முக்கியமான தருணங்களில் பொருளாதாரத் தடைகளால் சோதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, பரிவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிலுவையில் உள்ள வைஷ்ணவியின் கட்டணத்தில் ஒரு பகுதியைச் செலுத்தும் வகையில் 1,000 வெள்ளியை தாம் அங்கீகரித்துள்ளதாக மஸ்வான் தெரிவித்தார்.








