ஷா ஆலம், ஜூலை 19- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் இன்று தாமான் மேடான் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுவான உடல் பரிசோதனை, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாகப் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் இந்த பரிசோதனை காலை 9.00 மணி தொடங்கி மாலை 3.00 மணி வரை பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 2 சி/6 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
தாமான் மேடான் வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் உடலாரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுப்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த இலவச பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்ய அழைக்கப் படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு 7,000 பேர் பயனடைந்ததாகவும் அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.
குடும்ப உறுப்பினர்களின் மருத்துவப் பின்னணி, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் மத்தியில் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


