ஜோகூர் பாரு, ஜூன் 24 - இல்லாத இணைய வேலை வாய்ப்புத் திட்டத்தினால் கவரப்பட்ட தொழிலதிபர் ஒருவர் 11 லட்சம் வெள்ளியை இழந்தார்.
இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது குறித்து 40 வயதுடைய அந்நபர் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் கூறினார்.
சமூக ஊடகங்களில் வெளியான வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை கடந்த மார்ச் 26ஆம் தேதி கண்டதாக அந்நபர் தனது புகாரில் கூறியுள்ளார் என அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கவேண்டும் என்றும் அதன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவரிடம் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் மீது ஆர்வம் கொண்ட பாதிக்கப்பட்ட நபர் கமிஷன் பெறுவதற்கு ஏதுவாக பொருள்கள வாங்கும் நோக்கில் கடந்த மார்ச் 28 முதல் ஜூன் 13 வரை 22 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 11 லட்சம் வெள்ளியை அனுப்பியுள்ளார் என குமார் கூறினார்.
இருப்பினும், வாக்குறுதியளித்தபடி எந்த கமிஷனும் கிடைக்காதபோது தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

