ஷா ஆலம், ஜூன் 20 - தேசிய வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று பூர்வக்குடி விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பூர்வக்குடி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் (MAPOA எண். 1/2025) பூர்வக்குடி சமூகத்தின் நில உரிமை தொடர்பான பல விஷயங்களை தாம் வலியுறுத்தியதாக வீ பாப்பாராய்டு கூறினார்.
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் நிதி நிறுவனத்தால் நிலம் பறிமுதல் செய்யப்படும் அபாயம் இருப்பதால் பூர்வக்குடி நிலத்தை வங்கிக் கடன்களுக்கு அடமானமாகவோ அல்லது உத்தரவாதமாகவோ பயன்படுத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இது பூர்வக்குடி சமூகத்தின் பாரம்பரிய சொத்துரிமைகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதோடு தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காக்கப்பட்டு வரும் மூதாதையர் நிலத்தை இழப்பதற்கும் வழி வகுக்கும்.
பூர்வக்குடி சமூகத்திற்குச் சொந்தமான நிலங்கள் பாரம்பரிய மதிப்பும் சமூகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொண்ட சொத்தாகும். எனவே, அவர்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக அது முடிந்தவரை சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.
அதுத் தவிர, வீடமைப்பு அல்லது வணிகத் திட்டங்களுக்காகப் பூர்வக்குடியினர் நிலங்கள் மேம்படுத்தப்பட்டால் அவற்றின் விற்பனை பூர்வக்குடி சமூகத்திற்கு மட்டுமே உரியதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


