கிள்ளான், ஜூன் 20 - கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசலுக்கு அருகில் நினைவகம் அமைக்கும் திட்டத்தை அரச கிள்ளான் மாநகர் (எம்.பி.டி.கே.) நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த திட்டம் ஊராட்சி மன்றங்களால் நிர்ணயிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் திட்டத்தை மீறுவதோடு அந்த நான்கு மாடி நினைவுச்சின்னம் அங்கீகரிக்கப்பட்டால் அது உள்ளூர் சமூகத்தினரிடையே இன மோதலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது என்று போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி கூறினார்.
குடியிருப்பாளர்களுக்கும் மேம்பாட்டாளராகளுக்கும் இடையே ஒரு பொது கலந்தாய்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள நிலத்தின் உண்மையான விதிமுறைகள் குடியிருப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட வணிகத்திற்கு மட்டுமே தவிர, நினைவுச் சின்னத்திற்கு அல்ல என்பதை மேம்பாட்டாளர்கள் அறிந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.
வரும் ஜூன் மாதம் 24ஆம் தேதி நடைபெறும் வட்டார மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக இந்த முன்மொழிவை மாநகர் மன்றம் முற்றிலுமாக நிராகரிக்கும் என்று நம்புகிறேன்
இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் மாநகர் மன்றம் அரசிதழில் வெளியிட்ட ஊராட்சித் திட்டம் 2035 மற்றும் தேசிய நிலச் சட்டத்தின் கீழ் நிலத்தின் வெளிப்படையான நிபந்தனைகளுக்கும் முரணானதாக அமையும். இது குடியிருப்பாளர்களுக்கும் உள்ளூர் அரசாங்கத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசல் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் உள்ள லோட் 82022 மற்றும் அருகிலுள்ள பல நிலங்களை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று கூறப்படும் நான்கு மாடி நினைவுச் சின்னக் கட்டுமானத்தை எதிர்த்து கம்போங் ராஜா குடியிருப்பாளர்கள் கடந்த ஜூன் 11ஆம் தேதி மாநகர் மன்றத்திடம் ஆட்சேப மனுவை சமர்ப்பித்தனர்.


