(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 19 - கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் வருடாந்திர நிகழ்வை கோத்தா கெமுனிங் தொகுதி இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது.
எஸ்.பி.எம். தேர்வில் 8ஏ மற்றும் அதற்கும் மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் இந்த நிகழ்வு நாளை 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலம், புக்கிட் ரிமாவ் ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெறும்.
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் அதேவேளையில் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்யும் மாணவர்களுக்கு வெகுமதி வழங்கி கெளரவிக்கும் இந்நிகழ்வை கோத்தா கெமுனிங் தொகுதி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
கடந்தாண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இத்தொகுதியிலுள்ள மூன்று இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்த 147 மாணவர்கள் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷிடமிருந்து பெற்றுக் கொண்டனர். சிறப்பு செய்யப்பட்டவர்களில் 16 பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.எம். தேர்வில் 8ஏ, 9ஏ மற்றும் 10ஏ பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நோக்கிலான இந்த நிகழ்வுக்கு தொகுதி சேவை மையம் கடந்தாண்டு சுமார் 35,000 வெள்ளியை செலவிட்டது.


