ஷா ஆலம், ஜூன் 18: சிலாங்கூரில் மொத்தம் 331,193 குடும்பங்கள் தற்போது ஸ்கிம் ஆயர் டாருல் எஹ்சான் (SADE) மூலம் மாதத்திற்கு 20 கன மீட்டர் இலவச தண்ணீரைப் பெறுகின்றனர்.
இந்தத் திட்டம் மாநிலத்தில் வசிக்கும் குடிமக்கள், அதாவது RM5,000க்கும் குறைவான மாதக் குடும்ப வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது என பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்) தெரிவித்தது.
இத்திட்டத்திற்கு இவ்வாண்டு இறுதி வரை விண்ணப்பங்கள் திறந்திருப்பதால், தகுதியுள்ள குடிமக்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அந்நிறுவனம் முகநூல் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
"மக்களின் நலன் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான முக்கியமான முயற்சிகளில் இந்தத் திட்டமும் ஒன்றாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2022 முதல், இத்திட்டத்தின் விண்ணப்பங்களுக்கான வீட்டு வருமான தகுதி வரம்பு மாதத்திற்கு RM4,000யிலிருந்து RM5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இலவச நீர் விநியோகத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்க மாநில அரசு RM30 மில்லியனுக்கும் அதிகமான செலவை ஏற்றுக்கொண்டது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் www.airselangor.com/services/sade என்ற அதிகாரப்பூர்வ ஆயர் சிலாங்கூர் வலைத்தளத்தை நாடலாம்.


