கோம்பாக், ஜூன் 12 - வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு வழங்கிய 450,000 வெள்ளி நிதியில் கூரையுடன்கூடிய கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை செலாயாங் ஜெயாவில் வசிக்கும் மக்கள் அனுபவிப்பார்கள்.
செலாயாங் ஜெயா பொது பூங்காவை மேம்படுத்தும் திட்டத்தில் சமூகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் கட்டப்படும் என்று செலாயாங் நகராண்மைக் கழக (எம்.பி.எஸ்) உறுப்பினர் யூ சின் ஓங் கூறினார்.
அமைச்சிடம் செய்யப்பட்ட விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதன் விளைவாக இந்த ஆண்டு எம்.பி.எஸ். மேற்கொள்ளும் முதலாவது திட்டம் இதுவாகும். கூடைப்பந்து மைதானம் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதி செய்ய பாதசாரி பாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தையும் நாங்கள் கட்டுவோம் என்று அவர் கூறினார்.
விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி செப்டம்பரில் முழுமையாக நிறைவடையும் என்று சின் ஓங் கூறினார்.
குடியிருப்பாளர்கள் பொது வசதிகளை நன்கு கவனித்துக் கொள்ளும் அதேவேளையில் நாசவேலைகளைத் தவிர்க்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


