SELANGOR

வறட்சியை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்- முக்கிய அணைகளில் 90% நீர் கையிருப்பு

4 ஜூன் 2025, 11:59 AM
வறட்சியை எதிர்கொள்ள சிலாங்கூர் தயார்- முக்கிய அணைகளில் 90% நீர் கையிருப்பு

ஷா ஆலம், ஜூன் 4- சிலாங்கூர் மாநிலத்தில்  வரும் செப்டம்பர் மாதம்  வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கோடைக் காலம் அல்லது  தென்மேற்கு பருவமழையின் போது போதுமான அளவு கச்சா  நீர் விநியோகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள  ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களும்  90 விழுக்காட்டுக்கும்  அதிகமான நீர்  கொள்ளளவைப் பதிவு செய்துள்ளதாக உள்கட்டமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ  இஷாம் ஹாஷிம் கூறினார்.

இதில் மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் (எஸ்.ஜே.ஏ.எம்.) நீர் ஆதாரங்களும் அடங்கும். இதுவரை அனைத்து அணைகளிலும் நீர் கொள்ளளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.  நாம் வறட்சி காலத்தை எதிர்கொண்டாலும் இறைவன் அருளால் நீர் விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் தெரிவித்தார்.

சிலாங்கூரில் நீர் மாசுபாடு மற்றும் வறட்சி பிரச்சினைகளுக்கு  எஸ்.ஜே.ஏ.எம். திட்டம் மூலம்    99 விழுக்காடு  தீர்வினைக் காண முடியும் என்று  மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார் .

இந்த எஸ்.ஜே.ஏ.எம். திட்டம் பல்வேறு தொகுப்புகளை  உள்ளடக்கியுள்ளது. ஹோராஸ்  600 பம்பிங் ஸ்டேஷன் (தொகுப்பு ஏ), ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் (தொகுப்பு பி), சிலாங்கூர் ஆற்றை திருப்பி விடுதல் (தொகுப்பு சி) ஆகியவற்றோடு  செமினியில் உள்ள குளம் பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்ட பல முக்கிய தொகுப்புகள் அடங்கும்.

கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு  பருவமழை செப்டம்பர் மத்திய பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை  இயக்குநர்  டாக்டர் முகமட் ஹிஷாம் முகமது ஹனிப் கடந்த வாரம் கூறியிருந்தார்.

சிலாங்கூரில் உள்ள ஏழு முக்கிய நீர்த் தேக்கங்கள் பின்வருமாறு:

• சுங்கை சிலாங்கூர்  அணை (உலு சிலாங்கூர்)

• சுங்கை திங்கி அணை (உலு சிலாங்கூர்)

• தாசேக் சுபாங்  அணை (பெட்டாலிங்)

• சுங்கை லங்காட் அணை (உலு லங்காட்)

• செமினி அணை (உலு லங்காட்)

• கிளாங் கேட்ஸ் அணை (கோம்பாக்)

• பத்து அணை (கோம்பாக்)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.