ஷா ஆலம், ஜூன் 4 - வேப் எனப்படும் மின் சிகரெட்டுகள் மீதான தடையை அமல்படுத்துவதற்கு முன்பு வர்த்தகர்கள் உட்பட பங்களிப்பாளர்களின் கருத்துகளை மாநில அரசு ஆராயும்.
எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுமையாக இல்லாதிருப்பதையும் அதே நேரத்தில் பொது சுகாதார நலன்கள் புறக்கணிக்கக் படாமலிருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த வேப் விற்பனையாளர்களிடமும் ஊழியர்கள் உள்ளனர். அதேசமயம், சமூகத்தின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் உடலாரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. மேலும் அளவு குறைவாக இருந்தாலும், கஞ்சாவைப் பயன்படுத்துவது போன்ற பிற விளைவுகள் ஏற்படும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம் என்றார் அவர்.
ஆகவே, ஒரு கட்டுப்பாடு செயல்படுத்தப்படும் என்பதோடு இதன் தொடர்பில் பொது சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்து வருகிறார் என்று டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.
சிலாங்கூரில் வேப் பொருட்கள் மற்றும் மின் சிகரெட்டுகளின் விற்பனையைத் தடை செய்வதற்கான திட்டம் அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அமிருடின் முன்னதாக தெரிவித்திருந்தார்.
பள்ளி வளாகங்களுக்கு அருகில் மாணவர்கள் புகைபிடிப்பதாக வந்த தகவல்கள் உட்பட அதிகரித்து வரும் கடுமையான உடல் நலப் பாதிப்புகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
திரெங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே மின் சிகிரெட்டுகளுக்கு தடை விதித்துள்ளன. வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த தடை அமலுக்கு வருவதாக திரெங்கானு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜோகூர் மாநிலத்தில் கடந்த 2016 முதல் இந்த தடை அமலில் உள்ளது.


