ஷா ஆலம், ஜூன் 4- கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியை தாம் காலி செய்யப் போவதில்லை என்று கெஅடிலான் ராக்யாட் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்தக் கூற்று கற்பனையானது மற்றும் ஆதாரமற்றது என்று வர்ணித்த சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர், தொகுதியை காலி செய்வது அவ்வளவு எளிதான காரியயல்ல என்றார்.
இது அவ்வளவு எளிதல்ல. இதற்கு சில ஆய்வுகள் தேவை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போலீஸ் துறைக்கு மின்-சைக்கிள் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜீஸ் போட்டியிடுவதற்கு ஏதுவாக இடைத்தேர்தல் நடத்தும் வகையில் சுங்கை துவா தொகுதி காலி செய்யப்படும் என்ற ஆருடங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடின் இவ்வாறு கூறினார்.
அம்னோவிலிருந்து விலகி கெஅடிலான் சேர விரும்புவதாக தெங்கு ஸப்ருள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.


