ஷா ஆலம், ஜூன் 3 - காகங்களால் ஏற்படும் இடையூறு தொடர்பில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நான்கு பகுதி மக்களிடமிருந்து மீண்டும் மீண்டும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செக்சன் எஸ்எஸ்2 , எஸ்எஸ்23 வணிகப் பகுதிகள் மற்றும் பி.ஜே.எஸ். சுற்றுவட்டாரம் ஆகியவையே அப்பகுதிகளாகும் என பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தக தகவல் தொடர்பு பிரிவு ஒரு அறிக்கையில் கூறியது.
காகங்கள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் மொத்தம் 27 ஹாட்ஸ்பாட் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு பகுதிகளில் தொடர்ச்சியாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காகங்களின் எண்ணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்த தொடர்ச்சியான புகார்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியாக ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் காகங்களை சுடும் நடவடிக்கையை எம்.பி.பி ஜே. செயல்படுத்துகிறது.
இவ்வாண்டு முதலாவது தொடரின் போது 1,486 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. 2021 முதல் கடந்த ஆண்டு வரை மொத்தம் 5,896 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. மேலும் சுடப்பபட்ட காகங்களின் உடல்களும் சிறப்புத் தொட்டிகளில் வைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்புத் துறையின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன என்று மாநகர் மன்றம் கூறியது.
கடந்த 2020 முதல் கடந்த ஏப்ரல் வரை காகங்களின் தொல்லை தொடர்பாக 194 புகார்கள் பெறப்பட்டதாக மாநகர் மன்றம் முன்னதாக அறிக்கையின் மூலம் அறிவித்தது.


