செய்தி ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூன் 1- எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு அடைவு நிலையை எட்ட முடியாத நிலையில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாத நிலையிலிருக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் சொந்தோசா தொகுதி சேவை மையம் ‘அரசாங்க உயர்கல்விக் கூடங்களை நோக்கி‘ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இங்குள்ள பண்டார் செந்தோசா, எம்.பி.டி.கே. மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த வருடாந்திர நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து திவேட் கல்வித் திட்டம் தொடர்பான விளக்கங்களை பெற்றனர்.
திவேட் தொழில்திறன் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, திறன்பெற்ற மனித ஆற்றலின் உருவாக்கத்தில் அரசாங்க உயர் கல்விக்கூடங்களின் பங்களிப்பு, இளம் தலைமுறையினர் மத்தியில் நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக செந்தேசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறிய அவர், தொழில்திறன் கல்வியின் வாயிலாகவும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டதை இது காட்டுகிறது என்றார்.
இந்த நிகழ்வில் 12 அரசாங்க தொழில்திறன் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்ததோடு விருப்பமான பயிற்சிகளில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதிலும் உதவியதாக அவர் சொன்னார்.
அரசாங்கம் மக்களுக்கு பல உதவித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளன. அனைத்து மாணவர்களுக்கு கல்வி பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நேரடியாக உயர்கல்விக் கூடங்களில் சேர இயலாவிட்டாலும் திவேட் வாயிலாகவும் உயர்கல்விக் கூடங்களில் பயில்வதற்குரிய வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படுவதில்லை. ஆகவே, பெற்றோர்களும் இத்தகைய கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



