ஷா ஆலம், மே 24- அண்மைய சில வாரங்களாக மாநரைச் சுற்றி அடிக்கடி கேட்கப்படும் வெடிப்பு போன்ற சத்தத்திற்கு காரணத்தை ஆராய ஷா ஆலம் மாநகர் மன்றம் தயாராக உள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய இந்த வெடிச் சத்தம் குறித்த விசாரணையின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமட் பவுஸி முகமது யாத்திம் தெரிவித்தார்.
மாநகரில் கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களாக அடிக்கடி கேட்கப்படும் வெடிச் சத்தத்திற்கு காரணத்தை விசாரிக்கும்படி பொறியியல் துறையை நான் பணிக்க விருக்கிறேன்.
விசாரணை நடத்தப்படும். விரைவில் இந்த விஷயம் குறித்து உங்களுக்குத் தெரிவிப்போம் என்று ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்காவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.
வெடிச் சத்தத்தின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக விசாரணை விரைவுபடுத்தவும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு, அமலாக்கக் குழுக்கள் மற்றும் பந்தாஸ் எனப்படும் விரைவு ரோந்துப் பிரிவுக்கு இடையே ஒத்துழைப்பைத் அதிகரிக்கவும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தை ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு கேட்டுக் கொண்டது.
காரணத்தை எங்களால் அடையாளம் காண முடிந்தால் பொதுமக்களின் கவலையைப் போக்கும் வகையில் அதன் முடிவுகளை அறிவிப்போம் என்று டத்தோ இங் சூயி லிம் மாநில அரசு தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வெடி போன்ற சத்தம் கடந்த சில வாரங்களாக இங்கு ஏற்பட்டு வருகிறது. காரணம் புரியாத இச்சம்பவம் குடியிருப்பாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வருகிறது.


