கிள்ளான், மே 23 - மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் மதிப்பீட்டு வரிப்பணம், பொது சேவை மற்றும் உள்கட்டமைப்பில் முறையாக மறு முதலீடு செய்யப்படுவதன் மூலம் அது மீண்டும் மக்களிடமே சென்று சேர்வதை உறுதி செய்யும்படி சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு டத்தோ இங் சூயி லிம் உத்தரவிட்டுள்ளார்.
வரி செலுத்துவோர் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு விரைவான, திறமையான சேவையை வழங்குவதில் ஊராட்சி மன்றங்கள் மிகவும் ஆக்ககரமான முறையில் செயல்படுவதையும் சிலாங்கூர் உறுதி செய்ய விரும்புகிறது என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் கூறினார்.
மதிப்பீட்டு வரி ஒருங்கிணைப்பை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன். மேலும் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் சேகரிக்கப்படும் ஒவ்வொரு வெள்ளியும் சிறந்த உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள் மூலம் மக்களுக்குத் திரும்புவதை உறுதி செய்ய விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றத்திற்கு (எம்.பி.டி.கே.) நேற்று மேற்கொண்ட பணி நிமித்த வருகைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
இவ்வாண்டு ஊராட்சி மன்றங்களுக்கான தமது மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருப்பதாக இங் தெரிவித்தார்.
தூய்மை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை கிள்ளான் குடியிருப்பாளர்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பயனுள்ள வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கிள்ளான் ஆற்றுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வடிகால் பராமரிப்பை மேம்படுத்துவதையும் கம்போங் செந்தோசா மற்றும் காப்பார் போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் துப்புரவு செய்யும் நேரத்தை அதிகரிப்பதையும் மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
அனைத்து சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் திட்ட காலக்கெடு அரச மாநகர் மன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து ஊராட்சி மன்றங்களும் மதிப்பீட்டு வரியை 25 சதவீதம் உயர்த்த சிலாங்கூர் அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியது. இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. கிள்ளானில் பொது வசதிகளை மேம்படுத்த மாநகர் மன்றம் இவ்வாண்டு 64.8 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


